சிறுவயது சிந்தனைகள் - பகுதி 7
என் இளம்பிராயத்து நண்பர்களில் முக்கியமானவர்கள், குரு, 'சிவாஜி' சாரதி, 'நரசிம்மன்'கள் (ஒரே பெயரில் இருவர்), கண்ணன், 'குண்டு' முரளி, 'ஹேமமாலினி' முரளி (நடிகை ஹேமமாலினி அவனது உறவினர் என்பதால்!), கோவிந்து, ரவி-பாலு (இரட்டையர்கள்), ஸ்ரீகாந்த், ஸ்ரீநாத் ஆகியோர். ஒவ்வொருவரிடமும், ஒரு திறமை இருந்தது. ஓரு நரசிம்மன் கபடியில் கில்லாடி; இன்னொருவனைப் போல, under-arm-இல், அத்தனை வேகமாக Off-cutter வகை பந்து வீசுபவரை நான் இது வரை சந்தித்ததில்லை! அவனை மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும். கொஞ்சம் அசந்தால், ஸ்டம்ப் பறந்து விடும், அல்லது Plumb-in-Front!
குரு கில்லி தாண்டு விளையாட்டில் கரை கண்டவன். 'குண்டு' முரளி சேவாக் போல் பலத்தை பிரயோகித்து, மட்டை பிடித்து விளாசுவதில் நிகரற்றவன்! கண்ணன் சாத்வீகமானவன். டிராவிட் போல, நன்றாக மட்டை போடுவதில் வல்லவன். அவன் விக்கெட்டை எடுக்க போராட வேண்டியிருக்கும். 'சிவாஜி' சாரதி நடிப்பில் கெட்டி. அவனுக்கு பல சிவாஜிப் படப்பாடல்களும் வசனங்களும் அத்துப்படி! Great Entertainer! 'ஹேமமாலினி' முரளி மிக அழகாகப் பாடுவான்.
சைக்கிள் ஓட்டுவதில் ரவியை மிஞ்ச ஆள் கிடையாது. சைக்கிள் அவனிடம் நின்று விளையாடும்! ஸ்ரீகாந்த் போல் ஒரு தைரியசாலியை பார்க்க இயலாது. குறி பார்த்து கோலி அடிப்பதில் கோவிந்துக்கு நிகர் அவன் தான்! 'கோலி மேல் கோலி' விளையாட்டில், எங்களை வென்று எங்கள் கோலிகளையெல்லாம் கைப்பற்றி விடுவான்! பின்னர் மனமிரங்கி, ஆளுக்கு சில கோலிகளை திரும்பக் கொடுத்து விட்டுச் செல்வான். நான் செஸ் ஒரளவு நன்றாக விளையாடுவேன்! (இவ்வளவு எழுதும்போது, என்னைப் பற்றியும் ஏதாவது பெருமையாகச் சொல்லிக் கொள்ள வேண்டும் அல்லவா?) என் தம்பி சிறு வயதில் சரியான முரடன். 'தம்பி உடையான், படைக்கு அஞ்சான்' என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினான்!!!
பீச்சில் கிரிக்கெட் விளையாடிய காலத்தில், மூன்று வகையான ஆட்டங்கள் ஆடியிருக்கிறோம். 1. UNDER-ARM கிரிக்கெட், முக்கால்வாசி நேரம், டென்னிஸ் பந்தைத் தான் உபயோகிப்போம்,2. கையை உயர தூக்கி பௌலிங்கு செய்யும் நார்மல் கிரிக்கெட் (இதற்கு கிரிக்கெட் அல்லது கார்க் பந்துகளையும் உபயோகிப்போம்)3. ·போர் அண்ட் சிக்ஸர் (Four and Sixer!)
மூன்றாவதைப் பற்றி சற்று விலாவாரியாகச் சொல்லி விடுகிறேன்! கடற்கரையில், மணற்பரப்பு துவங்கும் இடத்திலிருந்து சுமார் 50-60 அடி உள்ளே, மட்டையாளர் நின்று கொண்டு இருப்பார். அவருக்கு பந்தை வாகாக (Full Toss-ஆக) தூக்கிப் போட இன்னொரு நபர் மட்டையாளரிடமிருந்து 10 அடி தூரத்தில் இருப்பார். மட்டையாளர் முடிந்த அளவு பலத்தை பிரயோகித்து பந்தை அடிக்க வேண்டும். மணற்பரப்பின் விளிம்பில், பந்து தடுப்பாளர்கள் (இத்தனை பேர் என்று கணக்கெல்லாம் கிடையாது!) பலர் வியூகம் அமைத்து காத்திருப்பார்கள்.
மட்டையாளர் அடித்த பந்து, மணற்பரப்பில் பிட்ச் ஆகி, அதைக் கடந்து, ரோடுக்கு (மெரீனா பீச்சலிருந்து எலியட்ஸ் பீச் வரை செல்லும் காதலர் பாதை) சென்று விட்டால், 4 ஓட்டங்கள், பிட்ச் ஆகாமல் கடந்தால் 6 ஓட்டங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மட்டையாளரை அவுட்டாக்க 2 வழிகள் உண்டு. ஒன்று, வாகாகப் போடப்பட்ட பந்தை, தொடர்ந்து 3 முறை மட்டையாளர் தவற விடுவது. மற்றது, அவர் அடித்த பந்தை மணற்பரப்பில் இருந்தவாறே, தடுப்பாளர் காட்ச் பிடிப்பது. மேலே குறிப்பிட்டபடி, இவ்விளையாட்டில் 'குண்டு' முரளியை 'அவுட்' ஆக்குவது என்பது இயலாத காரியம்! அவனாக, 'Retired Hurt'-ஆனால் தான் உண்டு!!!
விளையாட்டுக்களுக்கு அடுத்து, நாங்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்தது, பார்த்தசாரதி கோயிலில் வருடம் தோறும், எங்களது பள்ளி விடுமுறைக் காலத்தில் நடைபெறும் உத்சவம் தான்! உத்சவத்திற்கு ஒரு வாரம் முன்பே மிகுந்த உற்சாகத்தோடு, உண்டியல் குலுக்கி, முடிந்த அளவு பணம் திரட்டி, அந்த 10 நாள் விழாவை ஆனந்தமாக வரவேற்கத் தயாராவோம். ஒவ்வொரு நாளும், உத்சவர் எந்த வாகனத்தில் வீதி வலம் வருவாரோ, அதைப் போலவே ஒரு மினியேச்சர் பல்லக்கு/வாகனம்/விக்ரகம் வடிவமைத்து, அதைத் தூக்கிக் கொண்டு, அவர் பின்னால், நாங்களும் மாட வீதிகளை வலம் வருவோம். தினமும் உண்டி குலுக்கி, அடுத்த நாள் தயாரிப்புச் செலவை ஓரளவு ஈடு கட்டுவோம்.
ஒரு முறை, கோயில் உத்சவரின் பிரதிபலிப்பாக அமைந்த, எங்கள் சிறிய வடிவ கருட வாகனத்தைக் கண்டு பலரும் வியந்து பாராட்டினர். பிறிதொரு முறை, தச்சாளரைக் கொண்டு ஒரு அழகிய சிறுதேரை வடிவமைத்து, அதை சிறப்பாக அலங்கரித்து, எங்கள் விக்ரக மூர்த்தியை அதில் அமர்த்தி, கோயிலின் பெரிய தேருக்குப் பின்னால் அதை பெருமையாக நாங்கள் இழுத்துச் சென்றபோது, திருவல்லிக்கேணியே மூக்கில் விரலை வைத்தது. அதைத் தொடர்ந்து, ஒரு 10 நாட்கள் நானும் என் நண்பர்களும் கர்வமாகவே திரிந்தோம்!!!
மேற்கூறிய நண்பர்களில், குருவையும் (சென்னை மாநகராட்சியில் பணி), 'off cutter' நரசிம்மனையும் (தற்போது, 'விஜயா ஸ்டோர்ஸ்' உரிமையாளன்!) இப்போதும் சந்திப்பதுண்டு. கண்ணன் CA படிப்பு முடித்து, பெங்களூரில் பெரிய வேலையில் இருக்கிறான். ஸ்ரீகாந்த் பொறியியல் (Mechanical) படிப்பு முடித்து, ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து விட்டான். சாரதி சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸில் பணி செய்வதாகக் கேள்விப்பட்டேன். சந்திக்க வேண்டும்! இன்னொரு நரசிம்மன், அமெரிக்காவில் (வேறென்ன, மென்பொருள் சம்மந்தப்பட்ட வேலை தான்!) இருக்கிறான். ரவியும், பாலுவும் குடும்பத்தோடு மும்பை சென்று விட்டனர். மற்ற சில சிறு வயது நண்பர்களை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்! என்ன இருந்தாலும், "மூழ்காத ஷிப்பே ·பிரெண்ட்ஷிப் தான்" அல்லவா?
என்றென்றும் அன்புடன்
பாலா
3 மறுமொழிகள்:
மூழ்காத ஷிப்பே ·பிரெண்ட்ஷிப் தான்
நீங்கள் எனது சிறுவயது நண்பர்களை பற்றிய எண்ணங்களை (nostalgic) உருவாக்கி விட்டிர்கள்
பாலா... சிறிது இடைவெளிக்குப் பின்னர் இந்த தொடரை தொடர்கின்றீர்கள், நன்றி. தொடர்ந்து வாசிக்கிறேன்.
Anbu,
Did you read "siRuvayathu sinthanaikaL" parts 4, 5 and 6?
Ganga,
Thanks for your comments!
enRenRum anbudan,
BALA
Post a Comment